முச்சக்கரவண்டியில் பயணித்த நெதர்லாந்து நாட்டுப் பெண்மணிக்கு தனது பாலியல் உறுப்புகளைக் காட்டிய ஒரு இளைஞன், கண்டி சுற்றுலாப் பொலிஸாரால் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார் .
பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டின் கீழ் இச்சம்பவம் பதிவாகியுள்ளது எனவும் குறித்த சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், கடந்த நவம்பர் 4 ஆம் திகதி ஹப்புத்தளையில் இருந்து கண்டி – குருணாகல் வீதி வழியாக மற்றொரு நெதர்லாந்து நாட்டுத் தோழியுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த 31 வயதுடைய குறித்த வெளிநாட்டுப் பெண் மீது மாவத்தகம பிரதேசத்தில் வைத்து இச் சீண்டல் நடத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தனது முச்சக்கர வண்டியை வெளிநாட்டுப் பெண்கள் பயணித்த வண்டிக்குச் சமமாக ஓட்டி வந்து இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். எனினும், பாதிக்கப்பட் பெண் உடனடியாகப் பின் இருக்கையில் இருந்தவாறு இந்தச் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இலங்கையின் பல பகுதிகளுக்கும் சுற்றுலா மேற்கொண்ட இந்தப் பெண்கள் இருவரும், மீண்டும் ஹப்புத்தளையில் உள்ள விடுதிக்குச் சென்று நவம்பர் 16 ஆம் திகதி அந்த வீடியோவை விடுதி உரிமையாளரிடம் காண்பித்துள்ளனர். விடுதி உரிமையாளரின் தகவலின் பேரில், பண்டாரவளை சுற்றுலாப் பிரிவின் பொறுப்பதிகாரி முறைப்பாட்டைப் பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகமகேவின் வழிகாட்டுதலின் கீழ், பொலிஸ் குழுவினர் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் மாவத்கம வைத்தியசாலை குறுக்குத் தெருவில் வசிக்கும் 32 வயதான திருமணமாகாத நபர் ஆவார். இவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபருக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியும் பொலிஸார் வசம் மீட்கப்பட்டுள்ளது சந்தேகநபர் இன்று (18) மாவத்கம பிலேசஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.










