ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – 600க்கும் மேற்பட்டோர் பலி.. Video

0
53

ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 622க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தின் காரணமாக பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும் ஆப்கானிஸ்தானின் குணார் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின், நகங்கர் மாகாணத்தில் ஜலாலாபாத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் வீதிகள் கட்டட இடிபாடுகளால் சூழப்பட்டிருப்பதால், மீட்புக் குழுவினர் நுழைய முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வைத்தியசாலைகளுக்கு நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் வந்து கொண்டிருப்பதாகவும், வீதி வழியாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு வர முடியாதவர்களை வான் வழியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மீட்புப் பணியில் பாதுகாப்புப் படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கட்டடங்களின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், இயற்கைச் சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.