நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது நகைகளைத் திருட முற்பட்ட 24 வயது இளம் யுவதி ஒருவரை ஆலயப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சாரணர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நேற்று (21) நடைபெற்ற நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது, குறித்த யுவதி பக்தர்களிடையே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடமாடியதை சாரணர்கள் அவதானித்து, அவரைத் தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.
இதன்போது, யுவதி ஒரு பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்டபோது, சாரணர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர், அப்பகுதியில் கடமையில் இருந்த பொலிஸாரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்டார்.
பொலிஸார் அவரைச் சோதனையிட்டபோது, அவரது உடைமைகளில் இருந்து மூன்று தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டன.
விசாரணையில், குறித்த யுவதி கொச்சிக்கடைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவருடன் மேலும் சிலர் ஆலயத்திற்கு வந்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவருடன் வந்த ஏனைய நபர்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யுவதியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து, அவரைக் கையும் களவுமாகப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சாரணர்களுக்கு பொலிஸார் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேர்த் திருவிழாவின் போது தமது தங்க நகைகள் திருடப்பட்டதாக 08 பேர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.