முல்லைத்தீவு – புலிமச்சிநாதிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்…
முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிமச்சநாதிகுளம் பகுதியில் நேற்று சிவபாதம் ஸ்ரீகாந்தன் என்ற 43 வயதான குடும்பஸ்தர் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் காணாமல்போன குடும்பஸ்தருடைய மேற்சட்டையும், கைத்தொலைபேசியும் புலிமச்சிநாதிகுளக் கட்டிலிருந்து மீட்கப்பட்டிருந்ததுடன், இவ்வாறு காணாமல்போன குடும்பஸ்தரின் விடயத்தில் பல சந்தேகங்களும் எழுந்துள்ளன.
இத்தகையசூழலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதுதொடர்பில் தெரியப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இன்று காலையில் காணாமல் போனவருடைய வீட்டிற்குச் சென்று அவருடைய குடும்பத்தாருடனும், உறவினர்களுடனும் கலந்துரையாடி நிலமைகளைக் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, பொலிஸ் தலைமையக ஆய்வாளரைச் சந்தித்து காணாமல் போனவர் தொடர்பில் துரித விசாரணைகளையும், துரித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார்.
காணாமல் போனவரைத் தேடுவதற்குரிய செயற்பாட்டில் மாங்குளம் பொலிசார் ஈடுபடத் தயாரான நிலையில், குறித்த காணாமல் போனவர் சடலமாக புலிமச்சினாதி குளத்தில் இனங்காணப்பட்டதாக ஊர்மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு தொலைபேசியூடாகத் தெரியப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.