கைது செய்யப்பட்ட விசேட வைத்தியர் உட்பட மூவருக்கும் பிணை மறுப்பு.. மீண்டும் விளக்கமறியல்.!

0
32

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் மஹேஷி சூரசிங்க விஜேரத்ன உட்பட மூவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

இவர்கள் மூன்றாம் தரப்பினூடாக மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கடந்த 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவர்களின் பிணை மனுக்களை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (24) நிராகரித்தது.

அதன்படி, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் முன்வைத்த சான்றுகளையும், பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களையும் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன..?

அதிக விலைக்கு மருத்துவ உபகரணங்களை மூன்றாம் தரப்பினர் மூலம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் இதுவரை கண்டறியப்பட்ட உண்மைகளின்படி, குறித்த வைத்தியர், நரம்பியல் அறுவை சிகிச்சைக்குத் தேவையான கருவிகளை, சந்தை விலையை விட அதிக விலைக்கு மூன்றாம் தரப்பினர் மூலம் விற்றுள்ளார்.

இந்த உபகரணங்களின் சந்தை மதிப்பு ரூ. 30,000 முதல் 60,000 வரை இருந்தாலும், அவர் தற்போது அவருடன் விளக்கமறியலில் உள்ள இரண்டு நபர்களின் உதவியுடன் ரூ. 120,000 முதல் 250,000 வரை விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட 70 க்கும் மேற்பட்ட நோயாளிகள் அளித்த தகவலின் அடிப்படையில், இந்த மோசடி மூலம் மூன்று சந்தேக நபர்களும் தோராயமாக ரூ. 30 மில்லியன் சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.