சென்னையில் இருந்து இலங்கை வந்த தாயும் மகளும் கைது.!

0
23

இலங்கையில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் சென்னை சென்ற தாயும், மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு அதிகாரிகளால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 2 பெண்கள், இந்திய கடவுச்சீட்டில் கொழும்பிற்கு சுற்றுலாப் பயணிகளாக வந்து சென்னை திரும்பிய நிலையில், அவர்களது கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதனை செய்த போது, குடியுரிமை அதிகாரிகளுக்கு அந்த பெண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆகையால், அவர்களை தனியே அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், இரண்டு பெண்களும் இலங்கையைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் என்பதும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து தமிழ்நாட்டில் குடியேறியதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, இந்திய கடவுச்சட்டை பெற்று பயன்படுத்தி வந்ததும், தற்போது, அந்த கடவுச்சீட்டில் இலங்கை சென்றுவிட்டு, சென்னை திரும்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்பேரில் போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டை பெற்று, அதனைப் பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்தனர்.

விசாரணையில், இருவரும் முகவர்கள் மூலம் போலி ஆவணங்களை வாங்கி, அந்த ஆவணங்களைப் பயன்படுத்தி கடவுசீட்டை பெற்றதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்தனர்.

இந்நிலையில், இவர்களுக்கு போலி கடவுச்சீட்டுக்களை தயாரித்துக் கொடுத்தது யார்? அதற்காக எவ்வளவு பணம் பெற்றார்கள்? என்ன மாதிரியான போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டது? யார் யாருக்கு இவ்வாறு போலி கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன ஆகிய கோணங்களில் இந்திய குடியுரிமை அதிகாரிகள் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.