கல்கிசை இளைஞன் ப.டு.கொ.லை – இருவர் கைது..!

0
29

கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சில்வெஸ்டர் வீதிக்கு அருகில் மே 05 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர், சந்தேகத்தின் பேரில், கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் திங்கட்கிழமை (12) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கல்கிசை, தெஹிவளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21 மற்றும் 32 வயதுடையவர் ஆவார்.

சம்பவ தினத்தன்று வீடொன்றுக்கு முன்பாக துப்புரவு செய்து கொண்டிருந்த, தெஹிவளை, ஓபன் பிளேஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றார்.

அதிலிருந்து தப்பிய இளைஞன், சிறிது தூரம் ஓடிச் சென்றார். ​மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி, அவரை பின் தொடர்ந்து ஓடிய துப்பாக்கி தாரி, வீதியின் ஓரத்தில் வைத்து அந்த இளைஞன் மீது பல தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார். அப்போது, திரும்பி வந்த அதே மோட்டார் சைக்கிளில் ஏறி, துப்பாக்கிதாரி தப்பியோடிவிட்டார். சம்பவ இடத்திலேயே அவ்விளைஞன் உயிரிழந்தார்.

இதையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்ததாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கல்கிசை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.