ஆசனவாயில் 60 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களை மறைத்து வைத்திருந்த இருவர் கைது.!

0
196

60 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 மற்றும் 46 வயதுயைட இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் இந்தியாவின் புதிய டில்லியிலிருந்து இன்றைய தினம் காலை 10.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

பின்னர், சந்தேக நபர்கள் இருவரும், விமான நிலையத்தின் ( Green Channel ) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது சுங்க அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர்களின் ஆசனவாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 54 மாணிக்கக் கற்களை, சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.