அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023 ஆம் ஆண்டுகளில்) விண்ணப்பித்த, நன்மைகளைப் பெறுவோர் மற்றும் பெறாதோர் என அனைவரினதும் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 23 ஆம் பிரிவின் பிரகாரம், நலன்புரி நன்மைகளைப் பெறும் நபர்களின் பெயர் பட்டியலை வருடாந்தம் புதுப்பிப்பது கட்டாயமாகும் என்பதால் இப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இச்செயன்முறைக்காகத் தகுதியுடைய 2,993,558 நபர்கள் ஏற்கனவே தமது தகவல்களைச் சமர்ப்பித்துள்ள நிலையில், அவர்களின் தகவல்களை உறுதிப்படுத்தும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் தற்போது நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.
அந்தந்தப் பிரிவுகளுக்குப் பொறுப்பான கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று, அவர்கள் வழங்கிய தகவல்களை உறுதிப்படுத்துவார்கள். இந்த மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் மார்ச் மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளன.
கணக்கெடுப்பு உத்தியோகத்தர் வீட்டிற்கு வரும்போது, தேவையான ஆவணங்களைச் சரிபார்ப்பதற்காகத் தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து உறுப்பினர்களினதும் தேசிய அடையாள அட்டைகள், கடந்த 3 மாதங்களுக்கான மின்சாரப் பட்டியல்கள், காணி உரிமையை உறுதிப்படுத்தும் உறுதிப்பத்திரங்கள், வாகன உரிமைப் பத்திரங்கள் (இருப்பின்), மருத்துவச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை உத்தியோகத்தர்களிடம் சமர்ப்பிக்கத் தயாராக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், முதியோர் கொடுப்பனவு, ஊனமுற்றோர் கொடுப்பனவு மற்றும் சிறுநீரக நோயாளர் உதவித் தொகை கோரி விண்ணப்பித்தவர்களின் தகவல்களும் இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் உள்ளடக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எவரேனும் தவறான தகவல்களை வழங்கினால், நலன்புரி சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் அது தண்டனைக்குரிய குற்றமாகும். அத்தகைய சந்தர்ப்பத்தில், நீதவான் முன்னிலையில் குற்றவாளியாகக் காணப்படும் ஒருவருக்கு 5,000 ரூபாவிற்கு மிகாத அபராதம் அல்லது ஓராண்டு கால சிறைத்தண்டனை அல்லது இவ்விரண்டு தண்டனைகளையும் விதிக்க அதிகாரம் உள்ளதாக அந்தச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.










