முல்லைத்தீவு பகுதியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்த கணவன் – மனைவி உட்பட ஐவர் கைது..!

0
73

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் கணவன் மனைவி உட்பட ஐந்து பேர் வீட்டில் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றையதினம் (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூங்கிலாறு வடக்கில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் ஐஸ் போதைப் பொருள் விற்பனைக்கு தயார் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த சந்தேகநபர்கள் நேற்றையதினம் (15.12.2025) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து 2 வாள்கள், 61,000 ரூபா பணம் மற்றும் சுமார் 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அடசூரிய அவர்களின் ஆலோசனையின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் திலின அவர்களின் வழிகாட்டலில் மாவட்ட புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தர் பொலிஸ் கொஸ்தாபிள் ஆருஸிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உத்தியோகத்தரான பொலிஸ் சார்ஜன் (37109) ரத்னாயக்க தலைமையில், பொலிஸ் கொஸ்தாபிள்கள் (12334) சந்தருபான், (25253) கிருஷாந், (100585) டில்ஷான், பெண் பொலிஸ் கொஸ்தாபிள் (13027) றுவந்தி மற்றும் பொலிஸ் கொஸ்தாபிள் சாரதி (80232) பிரியந்த ஆகியோர் இணைந்து குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.