டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு.!

0
66

டித்வா புயலினால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்தங்களால் 190 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம் இன்று (7) மதியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனர்த்தங்களால் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளன. கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 232 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கு அடுத்ததாக பதுளை மாவட்டத்தில் 90 மரணங்களும், நுவரெலியா மாவட்டத்தில் 89 மரணங்களும், குருநாகல் மாவட்டத்தில் 61 மரணங்களும் பதிவாகியுள்ளன.

அதேநேரம் நிலவிய சீரற்ற வானிலையால் நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 611,530 குடும்பங்களைச் சேர்ந்த 2,179,138 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 27,663 குடும்பங்களைச் சேர்ந்த 89,857 பேர் 956 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

4,517 வீடுகள் முழுமையாகவும், 76,066 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.