மட்டக்களப்பில் ஜஸ் போதைப் பொருளுடன் 3 வியாபாரிகள் கைது.!

0
78

மட்டக்களப்பில் பாரிய போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பேரை 95 கிராம் ஜஸ் போதை பொருளுடன் புதன்கிழமை (05) அதிகாலை 2.30 மணிக்கு கரடியனாறு உறுகாமம் மற்றும் கொக்குவில் பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.

இது பற்றி தெரியவருவதாவது…

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மட்டு தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு மற்றும் போதை ஒழிப்பு பிரிவினர் சம்பவ தினமான புதன்கிழமை (05) அதிகாலை 2.30 மணியளவில் கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை 2050 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்தனர்

இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் வாங்கிய வியாபாரியை 5 கிராம் 450 மில்லிகிராமும் கைது செய்து விசாரணையில் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள உறுகாமம் பகுதியைச் சேர்ந்த போதை பொருள் வியாபாரியிடம் வாங்கியதாக தெரிவித்தார்

இதனை தொடர்ந்து உறுகாமத்திலுள்ள போதை பொருள் வியாபரியின் வீட்டை சுற்றி வளைத்து சோதனையின் போது வீட்டின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியின் மேல்லுள்ள கவசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 90 கிராம் ஜஸ் போதை பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட வர் 34 வயதுடையவர் எனவும் ஆற்று மணல் அகழ்வுக்கு செல்வதாகவும் அங்கு கொழும்பில் இருந்து மணல் ஏற்ற வந்த மணல் லொறி சாரதி உடன் தொடர்புடைய நிலையில் அவர் கொழும்பில் இருந்து இந்த போதை பொருளை கொண்டுவந்து வழங்கியதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 90 கிராம் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் மற்றும் இருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.