மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை காலி முதல் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், சிலாபம் முதல் மன்னார், காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையிலுமான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு சுமார் (50-60) கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
அத்துடன் காலி முதல் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், சிலாபம் முதல் மன்னார், காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையிலும் உள்ள கரையோரத்திற்கு அப்பாலான கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.
எனவே அந்த பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.