பாணந்துறையில் பிரசித்திப் பெற்ற விகாரையின் விகாராதிபதிக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்து 2 கோடியே 8 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை மோசடியாக எடுத்த சம்பவம் தொடர்பாக பாணந்துறை விசேட குற்றவியல் பிரிவால் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா, ஜா-எல, மினுவாங்கொடை மற்றும் ஏகல ஆகிய இடங்களில் வசிக்கும் 33 முதல் 46 வயதுக்குட்பட்ட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக விகாராதிபதி அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விகாராதிபதியால் பாணந்துறையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தனது வங்கிக் கணக்கைப் பராமரித்து வந்துள்ள நிலையில், அவரது அடையாள அட்டை சிறிது காலத்திற்கு முன்பு காணாமல் போயுள்ளது.
அதன்படி, சந்தேக நபர்கள் பல சந்தர்ப்பங்களில் அதே வங்கியின் மற்றொரு வங்கிக் கிளையில் உள்ள தங்கள் சொந்தக் கணக்குகளுக்கு விகாராதிபதியின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை மாற்றி, பின்னர் பணத்தை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.