பொல்லால், மருமகனின் மண்டையில் தாக்கியதால், சம்பவ இடத்திலேயே மருமகன் மரணமடைந்த சம்பவம், காலியில் கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஹவத்த பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொரகொட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மருமகனே மரணமடைந்துள்ளார். தான் தாக்கிய பொல்லால், மாமனார் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
மருமகன் தனது வீட்டில் நண்பர்களுடன் இணைந்து மதுபானம் அருந்தியுள்ளார். மது விருந்துபசாரம் நிறைவடைந்த நிலையில், மதுபோதையில் தள்ளாடிய நண்பர்களை அவர்களது வீடுகளுக்கு கொண்டுசென்று விடுவதற்காக மாமனாரிடம் முச்சக்கரவண்டியை மருமகன் கேட்டுள்ளார்.
எனினும் தனது முச்சக்கரவண்டியை கொடுக்க மாமனார் மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த மருமகன், வீட்டின் கதவை பொல்லால் அடித்து உடைத்து தனது மனைவியையும் தாக்க முயன்றுள்ளார்.
மதுபோதையில் உள்ள மருமகனை தடுப்பதற்காக மாமனார் பொல்லால் மருமகனை தாக்கியுள்ளார். காயமடைந்த மருமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபரான 58 வயதுடைய மாமனார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் எனத் தெரிவித்த கரந்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.