டுபாய் அனுப்புவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் ஹட்டனில் கைது.!

0
156

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் குற்றவியல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

டுபாய் நாட்டில் உணவகம் மற்றும் வீட்டுப் பணிப்பெண் வேலைவாய்ப்புகள் கிடைப்பதாகக் கூறி, ஒரு நபரிடம் இருந்து 12 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாய் வரையிலான தொகையை சந்தேக நபர் பெற்றுள்ளார்.

இவர்களிடமிருந்து சுமார் மூன்று கோடி ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸ் நிலையத்திலும், ஹட்டன் பொலிஸ் அதிகாரியின் காரியாலயத்திலும் மொத்தம் 49 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் 12 பேர் டுபாய்க்கு அனுப்பப்படுவதாகக் கூறி கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

பாதிக்கப்பட்ட 49 பேரும் ஹட்டன் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி பிரசாத் வீரசேகரவை சந்தித்தனர்.

இதற்கு பதிலளித்த பொலிஸ் அதிகாரி, “பதிவு செய்யப்பட்ட அனைத்து முறைப்பாடுகளுக்கும் பொலிஸார் மூலம் தீர்வு வழங்கப்படும். இது குறித்து எவரும் அச்சப்படத் தேவையில்லை. பிரதான சந்தேக நபரை கைது செய்து ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸார் மற்றும் ஹட்டன் குற்றவியல் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.