அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் வௌ்ளிக்கிழமை (22) அன்று கைது செய்யப்பட்ட இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட எட்டாவது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க, கோட்டை நீதவான் நீதிமன்றத்தால், செவ்வாய்க்கிழமை (26) அன்று சரீரபிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிரணில் விக்ரமசிங்க, ஸூம் தொழிற்நுட்பத்தின் ஊடாக, வழக்கு விசாரணையில் பங்கேற்றிருந்தார்.
ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவி வகித்தகாலத்தில், 2023 செப்டெம்பர் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை, கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர் இங்கிலாந்தில் உள்ள வுப்ஹாம்படன் பல்கலைக்கழகத்தில் 22 ஆம் திகதி நடைபெற்ற நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். திருமதி விக்ரமசிங்க கௌரவப்பட்டம் பெறும் விழாவிலேயே கலந்து கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தில் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த இரண்டு நாட்களிலும் அவர் தனிப்பட்ட விஜயத்தையே முன்னெடுத்திருந்தார். இதற்காக மொத்தமாக 166 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த செலவுத் தொகையில், ஜனாதிபதி செயலகம் 133 இலட்சம் ரூபாயையும் பொலிஸ் மற்றும் கடற்படை 33 இலட்சம் ரூபாயையும் செலுத்தியுள்ளன.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில், வௌ்ளிக்கிழமை (22) அன்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, ஒகஸ்ட் 26 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கைவிலங்கு இன்றி நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விளக்கமறியல் உத்தரவுக்கு பின்னர் கைவிலங்கிடப்பட்டு, சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றப்பட்டு, புதிய மகசின் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும், ரணிலின் உடல் நிலை மோசமாக இருந்தமையால், சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையை கருத்தில்கொண்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவுக்கு சனிக்கிழமை (23) பிற்பகல் மாற்றப்பட்டார். அவருக்கு அவசர சிகிச்சைப்பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
சட்டமா அதிபர்சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், தனது வாய்மொழி சமர்ப்பிப்புகளை செவ்வாய்க்கிழமை (26) முன்வைத்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்ரம சிங்கவை பிணையில் விடுவிக்கும் விதிவிலக்கான சூழ்நிலைகளை பிரதிவாதிதரப்பு முன்வைக்காவிட்டால், விசாரணை முடியும்வரை அவரை விளக்கமறியலில்வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிநின்றார்.
சந்தேகத்திற்குரிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸூ ம் தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணையில் பிரசன்னமாய் இருந்தார்.
குற்றப்புலனாய்வுத்துறை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர்கள் முன்வைத்த உண்மைகளை கருத்தில் கொண்டகொழும்பு கோட்டைநீதவான் நிலுபுலி லங்காபுர, சந்தேக நபரை தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரபிணையில் விடுதலை செய்யப்பட்டார். மேலும் நீதவான் விசாரணை ஒக்டோபர் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.