முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் துப்பாக்கிதாரியான சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை, இன்று (13) குற்றப்புலனாய்வுத் துறையினரால் மட்டக்களப்பு காத்தான்குடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்படு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டிருந்தார்.
மட்டக்களப்பில் அவரிடம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் விசாரணையையடுத்து காத்தான்குடியைச் சேர்ந்தவரும் கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து பிள்ளையானுடன் செயற்பட்ட 45 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கைது செய்யப்பட்டவர், கடந்த 2024 ஜுன் 17ஆம் திகதி காத்தான்குடி மீன்பிடி இலாகாவீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த பெணிடம் தங்க ஆபரணங்களை கொள்ளையடிப்பதற்காக கை துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து, அவரை பொலிஸார் கைது செய்து 3 நாள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்த நிலையில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இதன் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Battinews)