முல்லைத்தீவில் தமிழ் இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இராணுவத்தினரில் மூவருக்கு விளக்கமறியல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 5 இராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
கைதான இராணுவத்தினரிடம் விசாரணைகள் இடம்பெற்று வந்திருந்த நிலையில் 3 இராணுவத்தினரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, குறித்த இளைஞனின் உடலை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்து செல்லுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, உடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த இராணுவ முகாமிற்கு சென்ற ஐவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் மற்றுமொரு நபருக்கு முதுகு பகுதிகளில் பலத்த அடிகாயங்கள் இருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.