யாழில் பூப்புனித நீராட்டு விழாவில் நடனமாடிய 19 வயது இளைஞன் மயங்கி விழுந்து உயிரிழப்பு.!

0
93

யாழ்ப்பாணத்தில் பூப்புனித நீராட்டு விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார்.

பண்டத்தரிப்பு – பல்லசுட்டி பகுதியைச் சேர்ந்த அன்னராசா அலெக்ஸன் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது…

மல்லாகம் – பயிரிட்டால் பகுதியில் நேற்று முன்தினம் (27) பூப்புனித நீராட்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட குறித்த இளைஞர், அங்கு உணவு அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது, ஒலிபெருக்கியில் பாடல் ஒலிக்கவே, அவர் எழுந்து சென்று மற்ற இளைஞர்களுடன் சேர்ந்து அந்தப் பாடலுக்கு நடனமாடினார்.

நடனமாடிக் கொண்டிருந்தபோது, திடீரென கீழே விழுந்து மயக்கமடைந்தார். உடனடியாக அவரை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

சடலத்தின் உடற்கூறு பரிசோதனைகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டன. மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் நடத்தினார்.

சாட்சிகளை தெல்லிப்பழை பொலிஸார் ஒழுங்குபடுத்தினர். மரணத்திற்கான காரணம் இன்னமும் கண்டறியப்படாத நிலையில், உடற்கூறு மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பப்படவுள்ளன.