அம்பாறை பகுதியில் நபரொருவரிடம் இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் இன்று (21) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அம்பாறை குற்றத் தடுப்பு பிரிவில் பணியாற்றிய இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் என தெரியவந்துள்ளது.
மணல் போக்குவரத்து தொழில் நடவடிக்கைகளை எவ்வித இடையூறும் இன்றி மேற்கொள்வதற்காகவும், அது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் இருப்பதற்காகவும், குறித்த இரு அதிகாரிகள் 25,000 ரூபாய் இலஞ்சமாக கோரியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த பொலிஸ் சார்ஜன்ட்கள் இருவரும் இலஞ்சம் கோரியமை, அதனைப் பெற்றுக்கொண்டமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.