வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியுடன், வாகன இறக்குமதியிலிருந்து மட்டும் இதுவரை 163 பில்லியன் ரூபாய் சுங்க வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய அதன் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்குகளை தாண்டி செல்லும் திறன் சுங்கத்திற்கு இருப்பதாகக் கூறினார்.
“2025 ஆம் ஆண்டில் நாங்கள் பெற்ற வருவாய் இலக்கு ரூ. 2,115 பில்லியன். கடந்த ஆண்டு, எங்கள் வருவாய் இலக்கு ரூ. 1,533 பில்லியனாக இருந்தது.
கடந்த ஆண்டு, நாங்கள் அந்த இலக்கை தாண்டி ரூ. 1,535 பில்லியன் வருவாய் ஈட்டினோம். அதேநேரம் இந்த ஆண்டும், ஜூன் மாத நடுப்பகுதியில், நாங்கள் ரூ. 900 பில்லியன் வருவாயை ஈட்டியுள்ளோம்.
வாகனங்களைப் பொறுத்தவரை, 2025 பெப்ரவரி 1, முதல் வாகன இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்தது. இதுவரை, சுமார் 14,000 வாகனங்கள இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
நாங்கள் சுமார் ரூ. 165 பில்லியன் வருமானம் ஈட்டியுள்ளோம். இந்த ஆண்டு, வாகன இறக்குமதியிலிருந்து ரூ. 450 பில்லியன் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
ஈரான் – இஸ்ரேல் போர் நாட்டிற்குள் பொருட்களை இறக்குமதி செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீவலி அருக்கொட, நாட்டிற்குள் பொருட்களை இறக்குமதி செய்யும் கப்பல்கள் தாமதமானதாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று கூறினார்.