கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் வங்கிக் கணக்கில் 50,000 ரூபாவை வைப்பிலிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (16) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்த கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், சந்தேகநபர் இஷாரா செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றியதாக தெரிவித்தனர்.
கொலை நடந்த நேரத்தில் இந்தப் பணம் வைப்புச் செய்யப்பட்டதாகவும், பணம் சந்தேகநபரின் கணக்கில் இணையவழி ஊடாக வைப்பிலிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் இந்தப் பணத்தை பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களிடமிருந்து பெற்றாரா என்பதைத் தீர்மானிக்க விசாரணைகள் நடைபெற்று வருவதாலும், விசாரணைகள் இன்னும் முடிவடையாததால், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தைக் கோரினர்.
அதன்படி, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.