முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் பௌத்த அடையாளங்கள்… உருவாக்கிய நபர் கூறியது..!

0
51

முல்லை – முள்ளியவளை பகுதியில் தனியார் காணி ஒன்றில் திடீரென பௌத்த விகாரை வடிவிலான உருவமொன்று உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது.

இந்நிலையில் பௌத்த விகாரை வடிவிலான உருவத்தை தாம் அமைத்தமைக்கான காரணத்தை நபர் ஒருவர் ஊடகங்களுக்கு இன்றையதினம் விளக்கமளித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…

வித்தியானந்தா கல்லூரிக்கு அருகாமையில் சிங்களம் கற்பிக்கும் நிலையம் ஒன்றினை நான் நடாத்தி வருகின்றேன்.

பொசன் போயா நிகழ்வினை எவ்வாறு கொண்டாடுவது என மாணவர்களுக்கு விளக்கமளிக்கவே பொசன் போயா நிகழ்வை வரைந்து காட்சிப்படுத்தியிருந்தேன்.

பௌத்த மதம் எவ்வாறு இலங்கைக்கு பரப்பப்பட்டது என்பதையே காட்சிப்படுத்தியிருந்தேன். அதனை சிலர் வந்து உடைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். நான் இது சம்பந்தமாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளேன்.

நான் மதத்தை பரப்புவதற்கோ அல்லது பௌத்தமதம் இங்கே வரவேண்டும் என்பதற்காக செய்யவில்லை. இங்கே கற்கும் பிள்ளைகளுக்கு செயல்முறை வடிவிலே செய்து விளக்கமளிக்கவே இதை செய்தேன். வெளியே தெரியும் வகையிலே காட்சிப்படுத்தினாலே மாணவர்களால் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும்.

மகிந்த தேரரின் வருகையும் இலங்கையில் பௌத்த மதம் ஸ்தாபித்தலும் என்றால் தேவநம்பிய தீசன் காலத்தில் மகிந்ததேரர் பிக்குணி சங்கமித்தை வருகை தந்து எவ்வாறு பௌத்த மதத்தை ஸ்தாபித்தனர் என்பது தொடர்பான படங்களுமே பதாதையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது எனவும் அவர் விளக்கமளித்தார்.