வடக்கு மாகாண காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசு மீளப்பெற்றுள்ளது.
அரசால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5 ஆயிரத்து 940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின் அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பை நாடாளுமன்றத்திலும், வெளியிலும் வெளிப்படுத்தியிருந்ததுடன் அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறும் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், வடக்கு மாகாண காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசு இன்று மீளப்பெற்றுள்ளது.
வர்த்தமானியை மீளப்பெற்றமைக்காக அநுரவுக்கு நன்றி தெரிவித்த சுமந்திரன்
வடக்கு மாகாண காணி தொடர்பான வர்த்தமானியை மீளபெற்றமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் அமைச்சரவைக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
“காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் பிரசுரித்த வர்த்தமானியை மீள்கைவாங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. நாம் விதித்த காலக்கெடுவுக்கு முன் இந்தத் தீர்மானம் எடுக்கப்படுள்ளது. இது உடனடியாக இன்றிரவே வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்.” – என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகப் பதிவில் இதனைத் தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதிக்கு இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சி எழுதிய கடிதத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.