56 சிறுமிகளின் தகாத புகைப்படங்களை வைத்திருந்த நபரொருவர் கைது.!

0
37

அநுராதபுரத்தில் 56 சிறுமிகளின் தகாத புகைப்படங்களைப் பெற்று வைத்திருந்த ஒருவர், குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அதிகார சபையின் இணைய சேவையாளராக நடித்து, டெலிகிராம் கணக்கு மூலம் இந்த புகைப்படங்களை அவர் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

56 சிறுமிகளும் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கண்டி பகுதியில் உயர்தர வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களை குறிவைத்து, 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவிகள் அடங்கிய டெலிகிராம் குழுக்களை இந்த நபர் அணுகியுள்ளார்.

அங்கு பெறப்பட்ட தொலைபேசி எண்கள் மூலம் அந்த சிறுமிகளை தொடர்பு கொண்டதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

அந்த தொலைபேசி எண்கள் மூலம் சிறுமிகளை தொடர்பு கொண்ட சந்தேக நபர், தன்னை ஒரு பெண் போன்று காட்டிக் கொண்டுள்ளார்.

சிறுமிகளின் தகாத புகைப்படங்கள் இணையத்தில் இருப்பதாகவும், சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அதிகார சபையின் ஒன்லைன் சேவைக்குத் தெரிவித்து அவற்றை அகற்ற வேண்டும் எனவும் அவர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் அதிகாரசபையின் அதிகாரியாகக் காட்டிக் கொண்டு ஒரு மோசடி கணக்கை உருவாக்கி, அதைப் பயன்படுத்தி சிறுமிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை வழங்கவும், தகாத புகைப்படங்களை பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், இவ்வாறு தரவுகளையும் தகாதபு கைப்படங்களையும் பதிவிறக்கம் செய்த 56 சிறுமிகள் பற்றிய தகவல்கள் சந்தேக நபரின் கணினியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. (Tamilwin)