பிரான்ஸில் சீட்டுப் பிடித்து மோசடி செய்த வவுனியாவைச் சொந்த இடமாகக் கொணட 41 வயதான குடும்பஸ்தர் மீது வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட 4 பேர் பொலிசால் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை பிரான்ஸ் பாரிஸ் வல்மொன்டைஸ் பகுதியில் நடந்துள்ளதாக தெரியவருகின்றது. தாக்குதல் மேற்கொண்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.
பிரான்சில் சீட்டுப் பிடிப்பது சட்டவிரோதமான செயலாகும். இருப்பினும் அங்கு வாழும் தமிழர்கள் பலர் பணம் சேமிக்கும் ஒரு நடவடிக்கையாக பலருடன் சேர்ந்து சீட்டுப்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
இவ்வாறான ஒரு சீட்டுப்பிடிப்பில் வவுனியா நபர் சுமார் 90 ஆயிரம் யூரோக்களை ஏமாற்றியதாக கூறப்படுகின்றது. அதோடு அப்பகுதியிலிருந்து தலைமறைவாகி வேறு ஓர் இடத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்ததாகத் தெரியவருகின்றது.
பணம் கொடுத்தவர்கள் சந்தேக நபர் மறைந்து வாழும் இடத்தை மோப்பம் பிடித்து அங்கு நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.
இத் தாக்குதலில் படுகாயமடைந்த வவுனியா குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.