சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக, பாதிக்கப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணிகள், உயிரிழந்த மாணவனுக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் நீதி கிடைக்கும் என்று நம்புவதாகக் கூறினர்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷான், கடந்த 29 ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.
மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக அவர் கடிதம் எழுதியிருந்தாலும், பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பகிடிவதையை தாங்க முடியாமல் சரித் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த சம்பவம் தொடர்பாக உயர்கல்வி அமைச்சு நேற்று (02) அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணை நடத்த ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சரித்துடன் பகிடிவதைக்கு உள்ளானதாக கூறப்படும், 16 மாணவர்களிடம் சமனலவெவ பொலிஸார் நேற்று வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
அந்த மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சட்டத்தரணிகளான ரச்சிக பலிஹவடன மற்றும் கல்ஹார விஜேசிங்க ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.