விபத்தில் துண்டிக்கப்பட்ட மின்சார கம்பி.. கவனிக்காமல் சென்றவர் பரிதாப மரணம்.. மட்டக்களப்பில் சம்பவம்.. வீடியோ

0
184

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து ஒன்றின்போது துண்டிக்கப்பட்ட மின்சார கம்பியில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியூடாக பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் காரில் பயணம் செய்த சாரதி காயமடைந்துள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளது. அத்தோடு உயர் மின் அழுத்த மின்சாரக் கம்பம் உடைந்து விழுந்துள்ளதால் அப்பகுதியில் மின் தடையும் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் தடைப்பட்டுள்ள மின்சார விநியோகத்தினை மீள வழமை நிலைக்கு கொண்டு வருவதற்காக மின்சாரசபை ஊழியர்கள் அப்பகுதியில் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது மட்டக்களப்பு-கல்முனை வீதியில் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் மின்சார கம்பியில் கழுத்துப்பகுதி சிக்குண்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மகன் காயமடைந்த நிலையில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பொலிஸாரினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அம்பாறை மாவட்டத்தின் சென்றல்கேம்ப் பகுதியை சேர்ந்த 42 வயதானவர் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (Video-fb)