உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து அதன் கலப்பையில் சிக்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு.!

0
191

அம்பாறை – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு, இத்தியடி பகுதியில் வயல் உழவு வேலைகளுக்கு உதவிக்காகச் சென்ற கண்ணகி கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்து அதன் சுழல் கலப்பையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்றைய தினம் (22) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளைஞன் கண்ணகிகிராமத்தை சேர்ந்த பெ.ஜீரோசன் என அடையாளம் காணப்பட்டார்.குறித்த இளைஞன் குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதுடன் இரு சகோதரிகளுடன் வாழ்ந்து வருவதுடன் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக பாடசாலையில் இருந்து இடைவிலகி பல்வேறு தொழில் புரிந்து வந்துள்ளான்.

இந்நிலையில் உழவு இயந்திர சாரதியாக வேண்டும் எனும் ஆசையில் நெருங்கிய நண்ரொருவருடன் உழவு இயந்திரத்தில் பயிற்சி எடுத்துவந்துள்ளான். இன்றைய தினமும் சில ஏக்கர் வயல்நிலங்களை உழுதுவிட்டு நண்பரின் உழவு இயந்திரத்தில் நண்பர் உழுது கொண்டிருக்கும்போதே அருகில் இருந்தவர் தவறி வீழ்ந்து வயலை இரட்டிப்பாக்கும் கலப்பைக்குள் அகப்பட்டு நசுங்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

உழவு இயந்திரத்தின் சாரதியான உயிரிழந்தவரின் நண்பன் அக்கரைப்பற்று பொலிசாரிடம் சரணடைந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சிறுவனின் உயிரிழப்பு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.