அம்பாறை – நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பிரதேசத்தில் இன்று புதன் கிழமை தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நிந்தவூர்-8 அல்மினன் வீதியைச் சேர்ந்த கடற்தொழில் மேற்கொள்ளும் முஹமட் அன்சார் முகமட் ஆசாத் (வயது – 25) என்ற இளைஞனே சம்பவ இடத்திலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயரமான தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறிக்கும் போது தென்னை மரத்தின் காய்ந்த ஓலையொன்றைப் பிடித்தபோது கால் வழுக்கி சுவரில் விழுந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
மேலும் குறித்த சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மேற்கொண்டுள்ளதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.










