வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையின் சங்கிலியை அறுத்துச் சென்ற திருடன்.!

0
104

களுத்துறை வடக்கு, வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்து கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

திருடப்பட்டதாக கூறப்படும் தங்கச் சங்கிலியின் பெறுமதி 119,000 ரூபா ஆகும்.

இது தொடர்பில் தெரியவருவதாவது…

சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்றுள்ள நிலையில் குழந்தையும், பாட்டியும் வீட்டில் தனிமையிலிருந்துள்ளனர். இதன்போது, குழந்தையின் பாட்டி துணிகளைத் துவைத்து விட்டு அதனைக் காய வைப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.

சிறுமியின் பாட்டி வீட்டில் இல்லாததை அவதானித்த சந்தேக நபர், வீட்டிற்குள் நுழைந்து கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைத் திருடி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இனங்காணாத நபரொருவர் வீட்டிலிருந்து வெளியே செல்வதைக் கண்ட பாட்டி உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்த போது குழந்தை அலறிக்கொண்டிருப்பதை அவதானித்துள்ளார். பின்னர், குழந்தையின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி காணாமல் போயுள்ளதை அவதானித்த பாட்டி இது தொடர்பில் குழந்தையின் பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.