முச்சக்கரவண்டி மோதியதில் 9 வயது சிறுமி உயிரிழப்பு – 14 வயது சிறுமி படுகாயம்.!

0
221

களுத்துறை பிரதேசத்தில் தொடங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுத்துறை – மத்துகம பிரதான வீதியில் முச்சக்கரவண்டியில் மோதி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (24) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

களுத்துறையிலிருந்து மத்துகம நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் பயணித்த இரண்டு சிறுமிகள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது இரண்டு சிறுமிகளும் படுகாயமடைந்துள்ள நிலையில் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரண்டு சிறுமிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடங்கொடை பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த 14 வயதுடைய சிறுமி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.